மொழிக்குள்
புதிதாக ஒரு சிறுகதையாசிரியர் நுழையும்போது அவருடைய பிரத்யேக உலகத்தின் வண்ணங்களும்
வாழ்க்கையின் மீதான அவருடைய பார்வைகளும் மொழித்திரட்சிக்குள் ஊடுருவும் ரசவாதத்தை அவ்வடிவத்தின்
வாசகனாகவும் எழுத்தாளனாகவும் தொகுத்தறிவது அகவிரிவையும் வாசிப்பின்பத்தையும் அளிக்கும்
இலக்கியப் பயிற்சியாக இருக்கிறது. இங்கே பேசப்பட்டிருக்கும் நூல்கள் அந்தந்த ஆசிரியர்களின்
முதல் சிறுகதைத் தொகுப்புகள் என்பதைத் தவிர வேறெந்த ஒற்றுமையுமில்லை. ஒரே சமயத்தில்
வாசித்தேன் என்பதால் ஐந்து தொகுப்புகளைக் குறித்த ஒரு எளிய ஒப்பீட்டு ஆய்வு மனப்பிரதியில்
நிகழ்ந்தபோதும் அது முழுக்கவும் அகவயமானது என்பதால் அவற்றை இங்கே முன்வைக்கவில்லை.
ஒவ்வொரு தொகுப்பையும் குறித்த தனித்த பார்வைகளாகவே இக்கட்டுரை அமைந்திருக்கிறது.
திரைக்குப் பின்னால்- மீசையில் கறுப்பெழுதும்
தினங்களின் காஸ்மிக் நடனம்
மணி.எம்.கே.மணியின்
மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் தொகுப்பிலுள்ள பல கதைகளில் எதோவொரு
விதத்தில் பின்புலமாக சினிமா இருக்கிறது. அந்த உலகத்தில் புழங்கும் ஒரு மனிதன் இருக்கிறான்.
ஒவ்வொரு கதைக்கும் தனித்த உலகம், நடை, வடிவம் என்றில்லாமல் மொத்தமும் ஒரு தன்னிலைக்
குரலின் பேச்சாக இருக்கிறது.
வெவ்வேறு
விதமாகச் சொல்லிப்பார்த்தாலும் திரும்பத் திரும்ப அந்தப் பேச்சு காமத்தைப் பற்றியதாகவே
இருக்கிறது. திகட்டலுணர்வை தவிர்க்க முடிவதில்லை.
காமத்தைச் சொல்லுகின்ற வித்தையில் கலை நிகழாவிட்டால் ரசக்குறைவு ஆகிவிடுகிறது. இங்கே
சில கதைகளில் கலைத்தன்மை இயல்பாய் கூடியிருக்கிறது. சில இலக்கற்ற சித்தரிப்புகளாய்
நின்றுவிட்டிருக்கின்றன. ஆனாலும், ஆபாசம் என்பதாக அலட்டிக்கொள்ளாமல் அப்படியான வரையறைக்கு
உட்படும் விஷயங்களை மேற்பூச்சுக்களால் மறைப்பதற்கு மெனக்கெடாமல் திரைகளை ஒதுக்கிவிட்டு
இது இப்படித்தான் என்ற தொனியில் சொல்லப்பட்டிருக்கின்றன. மண்டோ மணியை பாதித்திருக்கிறாரா
என்று தெரியவில்லை.
பாலியலையும்
புணர்ச்சியையும் குறித்த பேச்சு நிரம்பியிருந்தாலும் பல கதைகளில் மனிதர்களின் அடிப்படையான
ஆதார உணர்ச்சிகளைப் பற்றியும் அவர்களை விளிம்பில் நிறுத்திவைத்து மிரட்டும் வாழ்க்கையைக்
குறித்தும் சற்று வீரியமான பேச்சும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. இந்த பேச்சில் காதல்,
கற்பு மற்றும் உறவுகளின் புனிதம் குறித்த எந்த மயக்கமான பார்வையுமில்லை. வாய்ப்புகள்
கிடைக்கும்போது மனிதர்கள் தங்கள் வெகு அந்தரங்கத்தில் விழைவது பொது நீதிகளுக்கும் நெறிகளுக்கும்
எதிரானதாகவே எப்போதும் இருக்கிறது. சரி, தவறு என்ற இருமையைத் தாண்டி “அடைதலுக்கான”
வேட்கை பெருகிவிடுகிறது என்பதான பார்வைகளும்
உண்டு.
ஹீரோயின்,
கற்பு, ராதா மாதவம், சுழலுகின்ற சில காதல் கதைகள், ஒரு வாக்கியம், ஒரு வாழ்க்கை, சினிமா
சினிமா போன்ற கதைகளில் வாழ்க்கையின் குரூரங்களை அபத்தங்களைச் சுட்டும் சித்தரிப்புகள்
நிரம்பியிருக்கின்றன. வாசக நினைவில் தங்கிவிடப்போகிற மனிதர்களையும் காட்சிகளையும் கொண்ட
குறிப்பித்தக்க கதை ஹீரோயின். “ எங்கே துயரம் இருக்கிறதோ அது புனித பூமி” என்ற மையத்தைக்
கொண்ட ”ஒரு வாக்கியம், ஒரு வாழ்க்கை” கதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. ”கற்பு”
கதையில் வல்லுறவு செய்யப்படும் பெண் ஆசைக்கு இணங்கி ஒத்துழைத்தாள் என்று சொல்வது ஒரு
எழுத்தாளன் இறங்கக்கூடாத சராசரிக்கும் கீழான பார்வை. அப்படியொரு பெண் இருக்கமாட்டாள்
என்பதல்ல இதன் கருத்து. வல்லுறவில் அப்படியான நல்ல உடல் சுகத்தைப் பெற்ற பெண் ”நாளைக்கும்
வருவீங்களா” என்று கேட்பதாகச் சொல்லப்படும்போது அவள் மிருகநிலைக்கு குறைவுபடுத்தப்படுகிறாள்.
ஆனால் அப்பெண்ணின் உளவியலை தன் மனைவிக்கு விரித்தெடுக்கும் ”ஆல்பெர்ட்” என்ற ஆணின்
பார்வை பொருட்படுத்தி விவாதிக்கக்கூடியது.
பெண்களின்
தற்பால் விழைவை தொடர்ச்சியாக பல கதைகளில் பார்க்கிறோம். உறவை விழைந்து தாபிக்கிறார்கள்,
வலை பின்னுகிறார்கள், அவ்வுறவுகளுக்கு பாதகம் ஏற்படாதவாறு தங்கள் வாழ்வின் ஆண்களை வளைக்கிறார்கள்.
உறவை அடைகிறார்கள், இழக்கிறார்கள். உன்மத்தம் கொள்கிறார்கள். மேலும் பெண்கள் ஆண்களுக்கு
கைமாற்றப்படுவது அல்லது கைமாறுவது மணியின் கதைகளில் தொடர்ச்சியாக நிகழும் கதைக்களன்.
உடன்படிக்கை, காலங்களில் அவள் வசந்தம், சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட், சரி விடு பாத்துப்போம்
போன்றவற்றைச் சொல்லலாம். உடலை மையப்படுத்திய ஆண் பெண் உறவு விளையாட்டின் கணக்குகளை
வெறுமனே சித்தரிக்கும் கதைகளாக நின்றுவிடுவதால் முழுமை கூடாத கதைகளாகவும் இவற்றைக்
கணிக்கிறேன். இந்தக் கதைகளின் வரிசையில் வைக்கத்தக்க ”இதனால், அறியவரும் நீதி” கதை
எப்படி விலகி மேலெழுகின்றது என்று சிந்திப்பது மேற்சொன்ன இருவகைமைக் கதைகளுக்கிடையே
உள்ள வித்தியாசங்களை அறிந்துகொள்ள உதவும்.
மொழிச்செறிவின்
வழியான ஒரு அனுபவம் இத்தொகுப்பில் சாத்தியமில்லை. எல்லா கதைகளும் சம்பவங்களாக, திரைக்காட்சிகளைப்
போன்று விவரிக்கப்பட்டிருக்கின்றன. இது எழுத்தாளனின் மீதான திரைக்கதாசிரியனின் பாதிப்பு
என்று தோன்றுகிறது.
மிகையூடிய அதிதீவிரம்-கிருஷ்ணனின்
ஆயிரம் நாமங்கள்
போகன்
சங்கரின் கதைகளில் சில பிரதான உள்ளோட்டங்களைச் சொல்லமுடியும். மிகத் தீவிரமான துயரங்களின்
முன்னாகவோ அல்லது ஒரு சலனமூட்டும் சூழலிலோ மனிதர்கள் இருத்தப்படுவது அவருடைய கதைகளில்
தொடர்ச்சியாக நிகழ்கிறது. இங்கே தீவிரமான துயரம் என்பது மரணமாகவோ நோய்மையால் வாதையுறும்
குழந்தைகளாகவோ அல்லது அவர்களைக் குறித்த வளர்ந்தோரின் இழப்புணர்வாகவோ இருக்கின்றது.
இந்தத் தீவிர தன்மைகளினால் ஒருவித Overwhelming ஆன (இந்த ஆங்கில வார்த்தையை ”பேரளவிலான
உணர்வழுத்தம்” என்பது போன்று அர்த்தத்தில் பயன்படுத்திக் கொள்கிறேன்) உணர்வை அடைகிறோம்.
ஜெயமோகன் சிறுகதைகளை ஒரே மூச்சில் வாசிக்க அமர்ந்தபோது அடைந்த அதே உணர்வு.
யட்சியின்
வசீகரமும் அதே சமயத்தில் தெய்வீகமும் கூடிய நிறைய பெண்கள் இக்கதைகளுக்குள் இருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் வாழ்வின் ஆண்களால் ஆராதிக்கப்படாதவர்கள். இதற்கு எதிர்நிலையான ஆண்களைப் புரிந்துகொள்ளாத பெண்களும்
அதே உலகத்தில்தான் இருக்கிறார்கள். பூ கதையில் காந்திமதி மற்றும் வத்சலா பாத்திரங்கள்
இருமைத்தன்மையின் வழியே அமைக்கப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு காலத்தைச் சேர்ந்தவர்களான
அவர்கள் எளியவர்களாய் அமைந்துவிட்ட தம் ஆண்களின் பொருட்டு ஒரு ஆண்மூர்க்கத்திற்கு எதிராக
ஒரே தன்மையிலான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.
பெண்ணின்
காரணமாய் அடையும் உக்கிரமான இழப்புணர்வை பேசும் படுதா அந்த உக்கிரத்தைச் சித்தரிக்கும்
தற்கணத்தோடு சுருங்கிவிடுகிறது. அந்த அலைகழிப்புக்குள் ஒளிந்திருப்பது அகத்தே வருமாறு
விளித்தும் நுழையாத கோழைத்தனமா அல்லது வேறு
ஏதேனுமா என்று அறுதியிட முடிவதில்லை. முற்பகுதியில் உருப்பெற்ற பிரிவாற்றாமையின் கவித்துவ
கோட்டுருவம் பலகீனமான பிற்பகுதியின் எளிமையால் சிதைவுற்றுவிடுகிறது. அகத்தே சென்றிருந்தால்
இவ்வளவு வேதனை இருந்திருக்காது என்று சொல்லும்போது மனதின் வாதை விலக்கப்பட்டு உடலின்
வாதை முன்னிலைப்படுத்தப்படுகிறது.
கலைக்கும்
லெளகீக வாழ்க்கைக்கும் இடையே நிகழும் பிணக்குகளையும் முரண்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது
நடிகன் கதை. கலைஞன் தனது நோய்வாதையை கலையின்
வழியே கடப்பதையும் உடல் மீதான கட்டுப்பாட்டை அடைவதன் மூலம் வலி ம(று)றக்கும் சாத்தியத்தை
குறித்ததாகவும் அமைந்திருக்கிறது. அவனுடைய
சிறகுகளை முறித்துப்போட்டு கால்களை தரையில் ஊன்றியிருக்கச் சொல்லி வற்புறுத்தும் குடும்ப
அமைப்பின் யதார்த்தமான முகத்தை இங்கே காண்கிறோம்.
வயதுக்கும்
ரசனையுணர்வுக்குமான தொடர்புகள் குறித்த உரையாடலையும் ஒரு இளம் ஓவியனின் வழியே தனது
பழைய காதல் நினைவுகளையும் இளமையுணர்வையும் மீட்டெடுத்துக் கொள்ள முயலும் மடந்தையொருத்தியின்
மனவுலகம் குறித்ததாகவும் அமைந்த பாஸிங் ஷோ கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. நடிகன் கதையைப் போல லெளகீகத்தால் புறந்தள்ளப்படும்
கலையைக் குறித்தான ஒரு உரையாடற் சரடையும் பூ கதையில் சித்தரிக்கப்பட்ட அனந்தராமன்-
கிருஷ்ணனின் தந்தை-காந்திமதி என்ற முக்கோணத்தின் இன்னொரு வடிவத்தையும் இக்கதையில் காணலாம்.
கிருஷ்ணனின்
ஆயிரம் நாமங்கள் கதையில் உம்மிணியைக் குறித்த சித்திரம் பரபுருஷர்களின் சப்புக்கொட்டலான
பேச்சின் வழியேதான் நமக்குக் கிடைக்கிறது. நேரிடையாக நாம் அவளைப் பார்ப்பதில்லை. கிருஷ்ணனின்
மீது பிரேமை கூடிய உம்மிணி என்ற அழுத்தமான குணவார்ப்பே இக்கதையின் பலம். கதையின் பிற்பகுதியில்
சொல்லப்படும் சம்பவங்களும் காட்சிப்படிமங்களும் ஆழங்கூடியவைதான் என்றாலும் ஆண்களின்
உரையாடலில் இடம்பெறு செய்திகளாகவே அவை அமைந்துவிடுகின்றன.
பூ
கதையைப் போன்றே இன்னுமொரு ”பேரளவிலான உணர்வழுத்தம்” வந்து சூழ்கிற” கதையாக மீட்பு கதையைச்
சொல்லலாம். புனைவு என்பதற்கான எத்தனையோ வரையறைகளில் வழக்கத்திலிருந்து விலகியவற்றைச்
சொல்வது என்பதும் உள்ளடங்கும் என்பதால் இவ்விரு கதைகளில் நிகழும் சம்பவங்களின் சாத்தியத்தை
நாம் சந்தேகிப்பதில்லை. உக்கிரமான மனவுணர்வுகளையும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களையும்
கையாளும்போது எழுத்தாளன் அவற்றை எவ்வளவு மட்டுப்படுத்தவேண்டும் அல்லது எப்படி
Sublimate செய்யவேண்டும் என்று சிந்திப்பதற்கு இவ்விரு கதைகளும் வாய்ப்பாக அமைகின்றன.
அந்த சிந்தனையிலிருந்து பெறப்படும் முடிபுகள் அவரவரைப் பொறுத்தது.
யாமினி
அம்மா மற்றும் சுரமானி ஆகியவை புறத்தில் எழுத்தாளன் மற்றும் எழுத்து சார்ந்த விஷயங்களைக்
கொண்டிருந்தாலும் அடிப்படையில் இரண்டுமே குழந்தைகளின் இழப்புணர்வை அனுபவிக்கும் மனங்களைச்
சித்தரிப்பவை. குழந்தைகளின் மரணம் போகனின் கதைகளில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவது
ஒரு பலகீனம்.பொதி கதையையும் இந்த வரிசையில் வைத்துப் பார்க்கலாம். கதையின் பின்புலச்
சித்தரிப்புகளும் விவரணைகளும் ஈர்க்கின்ற வகையில் இருந்தாலும் ”ஒரு அம்மையின் ஹிருதயத்தைவிட
சுத்தமான இடம் கிடையாது” என்ற வாக்கியத்தை நீக்கினால் இந்தக் கதை எப்படி உருப்பெறும்
என்பது யோசிக்கத்தக்கது. கட்டுப்பாடற்ற துடுக்குத்தனமான நடையைக் கொண்டிருந்தாலும் ஆடியில்
கரைந்த மனிதன் நவீன மனிதனின் உடைவுண்ட மனநிலைகளைப் பேசுவதால் முக்கியமான கதையாக அமைந்திருக்கிறது.
எரியும் ரோமத்தின் வாசனை-கேசம்
ஆண்களின்
வாழ்க்கையில் வெவ்வேறு உறவுநிலையில் அமைந்த பெண்களுடனான பிணைப்புகளையும் இழப்புகளையும்
பேசுகின்ற பல கதைகளைக் கொண்டதாக நரனின் கேசம் அமைந்திருக்கிறது. இந்த உறவுநிலையின்
குறியீட்டு பேசுபொருட்களாக காது, ரோமம், கேசம், ஓவியம், சைக்கிள், சிற்பங்கள் மற்றும்
ஆடையகத்தின் மெழுகுச்சிற்பம் போன்றவை அமைந்திருக்கின்றன. இக்கதைகளில் பொதுவாகவே ஒரு நினைவுகூறல் தொனி இருப்பதைச் சொல்லவேண்டும்.
மனிதர்களின்
சாயைகள் சிற்பங்களில் உறைவதும் அவர்களே சிற்பங்களிலிருந்து மீண்டும் மனிதர்களாய் மேலெழுதலும்
என காலத்தை மாற்றி அடுக்கி உருவாக்கப்பட்ட இருமையால் ஒருவித மாந்த்ரீக தன்மை கொண்டதாக
மானேந்தி கதை பின்னப்பட்டிருக்கிறது. சிற்சிறு ஒளிக்கீற்றான விவரிப்புகள் மற்றும் குணவார்ப்புகளின்
பலத்தில் மட்டுமே குறிப்பிடத்தக்கதாக அமைந்த இக்கதை தன் முழுமையில் அளிக்கவேண்டிய ஒருங்குணர்வைக்
கட்டியெழுப்பத் தவறுகிறது.
ஆணுக்கும்
பெண்ணுக்குமிடையேயான உலர்வுத்தன்மையான உறவில் உள்ள சிக்கல்களையும் உடல் மனம் மற்றும்
சொல் என எந்தவொரு பகிர்தலிலும் பரஸ்பரம் கூடவில்லையெனில் உணரப்படும் அந்நியத்தன்மையையும்
இயற்கை உருவாக்கி வைத்திருக்கும் இருபால் உறவின் மிக அடிப்படையான தேவைகளைக் குறித்ததாகவும்
அமைந்திருக்கிறது பெண் காது. பகிர்ந்துகொள்வது உள்வாங்கப்படும்போது கிடைக்கும் ஏற்புணர்வுக்கு
ஒரு மடியின் தன்மையுண்டு என்பது பெண்காது கிளர்த்தும் புனைவனுபவம்.
வெகுநுட்பத்தை
அடைவதற்கான பாதையில் பயணித்த கதைகளாக இருந்தாலும் ஒருவித நாடகீயத்தன்மையின் காரணமாகவோ
அல்லது மொழிநடையின் காரணமாகவோ குறிப்பிட்ட எல்லையில் நின்றுவிட்ட கதைகளாக கேசம், மரியபுஷ்பத்தின்
சைக்கிள்கள், ரோமம் ஆகியவற்றைச் சொல்லலாம். உதாரணத்திற்கு கேசம் கதையில் ஒரு முதியவனின்
புண்ணுக்கு ஒரு பெண் தன் கூந்தலின் நுனியால் எண்ணெய் வருடல் செய்கிறாள் என்பது கவித்துவமான
காட்சிப்படிமம். இக்கவித்துவ படிமம்தான் இக்கதையின் பிரதான வலு. ஆத்தியப்பனின் நோய்மை,
ஆவுடைத்தங்கத்தின் பின்கதை போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் கதாப்பாத்திரங்களின்
அகவயத் தன்னுரையாடல் இல்லாத காரணத்தால் ஒருவித பலகீனத் தன்மையைக் கொண்டிருக்கிறது.
ஒரு
குறும்படத்துக்கு பொருத்தமான கதையாக அமைந்திருக்கிறது மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்.
வசீகரமான கதைக்கருக்களாகத் தோற்றமளித்தாலும் நரனின் கதைகள் கூறுமுறையில் அவை அடையவேண்டிய
ஆழங்களை அடைவதில்லை. புறவயமான பார்வையிலேயே அவை தம்மை சமாதானப்படுத்திக் கொள்கின்றன.
சம்பவங்களாலும் விவரணைகளாலும் கதை சொல்லப்படும்போது அதன் உள்ளுறையில் வலுவான புனைவுச்சிந்தனை
இல்லாவிட்டால் அச்சொல்முறை நாடகீயமாக வெளிறிவிடுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.
தாய்மைக்கான
ஏக்கவுணர்வை பிரதானமாக பேசும் கதைகளாக ரோமம் மற்றும் மூன்று சீலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.
தீயில் எரிந்து இறந்த தாயின் இறுதி நினைவாய் பதிந்துவிட்ட கருகும் ரோமவாசனைக்கான ஓயாத
விருப்போடு அலையும் ஒரு இளைஞனை ரோமம் கதையிலும் நீரில் மூழ்கி இறந்த தாயின் நினைவோடு
அலையும் ஒரு இளைஞனை மூன்று சீலைகள் கதையிலும் பார்க்கிறோம். ஒருவிதத்தில் இவ்விரு கதைகளும்
வெவ்வேறு முறையில் சொல்லப்பட்ட ஒரே தன்மையிலான உணர்வாகச் சொல்லலாம்.
துயர
வாழ்வை அனுசரிக்கும் பெண்களையும் தற்கொலை செய்துகொள்ளும் பெண்களையும் பல கதைகளில் காணமுடிகிறது.
முழுக்க பெண்களால் அமைந்த செவ்வக வடிவப் பெண்கள் கதையில் நவீன ஆடையகத்தின் ஆண் மெழுகுபொம்மை
ஒரு கதாப்பாத்திரமாக சித்தரிக்கப்படுகிறது. அந்த கடையின் சூழலில் இயங்கும் பெண்கள்
தம் வாழ்வின் ஆண்களிடமிருந்து கிடைக்கப்பெறாதவைகளை அப்பொம்மையின் வழியே உணர விரும்புகிறார்கள்.
அந்த விருப்பம் பெரும்பாலும் பாலுணர்வைச் சார்ந்ததாகவே இருக்கிறது.
இறுதிப்பகுதியை
வேகமாக அடைந்துவிடும் விருப்பத்தோடும் மிக அவசரமாகச் சொல்லப்பட்ட ஒரு தொனியைக் கொடுக்கிறது
லயன் சர்க்கஸ். வெகு தட்டையான நடையைக் கொண்ட இக்கதையை மிகு நாடகீயமாகவே சொல்லமுடியும்.
பரிராஜா , வண்டுகள் போன்ற கதைகளில் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஏதுமில்லை. ஓவியத்துக்கும்
கவிதைக்கும் இடையில் இணைகோட்டை வைத்துச் சொல்லப்பட்ட இதோ என் சரீரம் கதையோடு ஒரு அந்நியமான
உணர்வே கிடைக்கிறது. கதைகளுக்கான விசேஷமான விஷயங்களைக் கண்டுபிடிக்கும் நரன் கூறுமுறையில்
இன்னுங் கவனம் செலுத்தலாம். குறிப்பாக பாத்திரங்களின் அகவயத் தன்னுரையாடலைக் கூட்டுவது
அவர் கதைக்களுக்கு இன்னும் அடர்த்தியைக் கொடுக்கும்.
மரபும்
மதிப்பீடுகளும் - அம்புப்படுக்கை
சமகாலப்
புனைவில் அதீதமாகத் தொழிற்படும் ஆண் பெண் உறவுச் சிடுக்குகளிலிருந்தும் பாலியல் சார்ந்த
புனைவுகளிலிருந்தும் சற்றே விலகிய உலகத்தைக் கொண்டிருக்கும் அம்புப் படுக்கை தொகுதியில்
இருவகையான பிரதேசங்கள் இருக்கின்றன. வாழ்க்கையின் நிலையாமையைக் குறித்த தத்துவார்த்தமான
பேச்சினூடே நம்பிக்கைமிகுந்த பார்வையை முன்வைக்க முயலும் அகவுலகை சார்ந்த கதைகளை ஒரு
பரப்பாகவும் நவீன வாழ்வில் மனிதன் எதிர்கொள்ளும் சிக்கல்களை, அரசியலை , கண்காணிப்பு
நிறுவனங்களைக் குறித்தான தர்க்கப்பூர்வமான உரையாடல் கொண்ட கதைகளை பிறிதொரு பரப்பாகவும்
பகுக்கலாம். ஆயினும் மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்துகிற ஒரு மரபான பார்வை இருவகை உலகங்களிலும் உண்டு.
இருவேறுபட்ட
மரணத்தருணங்களை ஒரு இளம் ஆயுர்வேத மருத்துவ மாணவனின் உளம் எதிர்க்கொள்வதை மையமாகக்
கொண்ட வாசுதேவன் மற்றும் அம்புப்படுக்கை ஆகியவற்றை ஒரு கோட்டில் வைத்து வாசிக்கலாம்.
வாசுதேவன் இளைஞன். வாழவேண்டிய வயதில் உடல் சிதைந்து மீளாப் படுக்கைக்குச் சென்றுவிட்டவன்.
உயிர் தரித்திருத்தலின் ஒளி எவ்வளவு மங்கியதாக இருந்தாலும் அதை வேண்டாமென்று ஊதி அணைத்துவிடமுடியாது.
அந்த சிறு ஒளிதான் வாசுதேவனின் பெற்றோர்களுடைய நம்பிக்கைகளுக்கு உயிரூட்டுகிறது. அதே
தருணத்தில் தவிர்க்கமுடியாதது நிகழும்போது ஒன்றின் வெறுமையை வாழ்க்கை இன்னொன்றால் நிரப்புகிறது
என்பதையும் காண்கிறோம்.
அம்புப்
படுக்கை கதையில் ஆனாரூனா வாழ்ந்து முதிர்ந்தவர்.
தன்னைப் பின் தொடர்ந்த மரணத்தைக் குறித்த விளையாட்டுக் கதைகள் சொல்பவர். மரணப்படுக்கையில்
கிடக்கும் அவருடைய சாவு சுற்றத்தால் எதிர்பார்க்கப்படுகையில் ஆனாரூனாவின் வாழ்க்கையில் தன் தாத்தா நின்ற ஸ்தானத்திலிருந்து
நாடி பிடித்துப் பார்க்கும் சுதர்சன் நம்பிக்கையூட்டும் சொற்களைச் சொல்கிறான். வாசுதேவன்
பிழைக்கமாட்டான் என்று சொல்வதையும் ஆனாரூனா பிழைத்துக்கொள்வார் என்று சொல்வதையும் சுற்றத்தையும்
சூழலையும் கணக்கில் கொண்டு யோசிக்கலாம்.
அரைகுறையான
ஆன்மீகப் பயிற்சிகள் கொண்ட மாணிக்கம் மற்றும் சித்தரின் சாயல் கொண்ட முறுக்குசாமி என்ற
இரு மனிதர்களோடு புராணீகப் பின்புலத்தைக் கொண்ட காளிங்க நர்த்தனம் கதை, தன் பலத்தை
முறுக்குசாமியின் பாத்திர வார்ப்பிலிருந்தும் கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனம் என்ற தொன்மத்திலிருந்து
எடுத்துக்கொள்கிறது. மாணிக்கத்தின் அலைகழிப்புகளை விட நர்த்தனத்திற்குப் பொருள் கொள்ளும்
தேடலை நோக்கிய சித்தரிப்பு வலுவாக அமைந்திருக்கிறது.
இத்தொகுப்பிலுள்ள
குருதி சோறு கதையை வாசித்தபோது தூயனின் ஒற்றைக்கைத் துலையன் என்ற குறுநாவல் நினைவுக்கு
வந்தது. இரண்டும் வெவ்வேறு களன்கள் என்றாலும் கோவில் திருவிழாக்கள் மற்றும் சடங்குகளைக்
கண்ணுறும் சிறுவர்கள் என்ற சித்தரிப்பை இரண்டிலும் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்தது.
பிறரின் பசிப்பிணி போக்க நீக்க தங்கள் வாழ்வை ஈந்தவர்கள் தெய்வநிலைக்கு உயர்த்தி வைக்கப்படும்
தொன்மப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கதையில் விஸ்வக்சேணனின் தர்மபத்தினி அன்னபூரணி
ஸ்ரீ அன்ன செளரக்ஷாம்பிகையாக வணங்கப்படுகையில் பாவம், குடிசையில் வைத்து எரித்துக்கொள்ளப்பட்ட
பாலாயி அடையாளமின்றி மறைந்துபோய்விடுகிறாள்.
நீண்ட
தலைப்பைக் கொண்ட சிறிய கதையான பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்
கதை தலைமுறைகளுக்கிடையேயான கவித்துவமான உறவுப்பிணைப்பை அழகாகச் சொல்கிறது. நவீன வாழ்வில்
மனிதர்களுக்கு கிடைத்துள்ள விஞ்ஞான வசதிகளின் வழியே மனிதர்கள் மிக நுண்மையாகச் சுரண்டப்படுவதை
ஒரு பெண்ணின் தனிமையான அகவுலகை மையப்படுத்திச் சொல்கிறது பேசும் பூனை.
Dystopian வகை நாவலான
ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 கதையின் பிரதானப்பாத்திரமான வின்ஸ்டன் ஸ்மித்தை நரோபா நேர்காணல்
செய்வதாய் அமைந்திருக்கும் 2016 கதையை 1984
ஐ அறியாதவருக்கும் இடறாத வகையில் எழுதியிருக்கிறார். மனிதர்கள் நிறுவனங்களால் கண்காணிக்கப்படுவதையும்
அமைப்புக்கும் நிறுவனத்திற்கும் எதிரான எந்தவொரு மனித நம்பிக்கையும் அவற்றால் உடனடியாக
சுத்திகரிக்கப்படுவதையும் இங்கே பார்க்கிறோம். அறிவியல் அதிபுனைவாகச் சொல்லப்பட்ட திமிங்கலம்
கதையையும் Dystopian கதையாக வாசிக்கலாம். பெரும்பான்மை
மனிதத்திரள் குற்றம் மற்றும் தீமையின் பங்குதாரர்களாக இருப்பதை சாரப்படுத்திப் பேசுகிறது
கூண்டு. நாயோடு போன பாண்டவரில் மூத்தவரான தர்மரின்
இறுதிப்பயணத்தை நினைவூட்டும் ஆரோகணம் காந்தியின் இடையறாத சுய பரிசீலினைகளையும் சேவைகளையும்
குறியீடாக்கி நன்னம்பிக்கையின் சின்னமாக அவர் சுட்டப்படுகிறார்.
ஒப்பீட்டளவில்
தர்க்கத்தைப் பிரதானப்படுத்திய கதைகளை விட அகவுலகை பிரதானப்படுத்திய முற்பகுதிக் கதைகள்
எளிமையாகவும் இயல்பாகவும் உயிரோட்டத்தோடும் இருக்கின்றன. கூண்டு, திமிங்கலம், 2016
மற்றும் ஆரோகணம் ஆகிய நான்கும் வேறு விதமாக கதை சொல்லவேண்டும் என்ற உந்துதலின் தடயங்களை
தமக்குள்ளேயே கொண்டிருக்கின்றன. அவருடைய இயல்பான கதையுலகமும் வேறாக சொல்லிப்பார்க்கும்
முயற்சியும் இடறலற்று ஒன்றுகூடிய கதையாக பேசும் பூனை கதையை குறிப்பிடலாம்.
அடையாளங்களின் உரையாடல்- பிரதியின்
நிர்வாணம்
தொகுப்பு
முழுமைக்கும் விரவியிருக்கும் தனித்த குரலைக் கொண்டிருப்பதும் ஒரே சிந்தனை அல்லது புனைவின்
மையத்திலிருந்து கதைகள் உருவாவதும் அரிதாகவே நிகழக்கூடியது. அந்த வகையில் லைலா எக்ஸின்
பிரதியின் நிர்வாணம் தொகுப்பு விதிவிலக்கு. கதைகளின் பேசுபொருளில் ஒரு தொடர்ச்சி அல்லது
ஒப்புமை இருக்கிறது. ரீங்காரம் அறுபடாமல் ஒலிக்கிறது. கதைகளை விட அவற்றைச் சொன்ன குரலுக்குப்
பின்னிருக்கும் சிந்தனையின் அலகுகள் முக்கியமானவை.
மதம்,
சாதி மற்றும் குடும்பம் போன்ற நிறுவனங்கள் உடலின் மீது கட்டுப்பாட்டையும் அடுக்குமுறைகளையும்
இறுக்கி அதை புனிதத்தன்மையின் மதிப்பீட்டுக் குறியீடாக மாற்றி வைத்திருக்கின்றன. குறிப்பாக
பெண்ணின் தூய்மை என்பது அவளது பாலியல் தூய்மைதான் என்று நிறுவப்பட்ட நிலையில் லைலா
எக்ஸின் பெண்கள் தம் மீறலை நிகழ்த்தும் முதன்மையான வெளியாக உடலே இருக்கிறது. அவர்கள்
தங்கள் உடலின் வேட்கைகளைக் குறித்தும் தங்களுடைய காமத்திலும் மிக வெளிப்படையானவர்களாக
இருக்கிறார்கள். ஆண்களின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட ”பெண்” என்னும் மயக்கம் நீக்கம்
செய்யப்பட்டு ஒரு ”உயிரி” என்ற இயல்பான இடத்தில் அப்பெண்கள் வைக்கப்படுகிறார்கள்.
வெவ்வேறு
ரூபத்தில் பல பெண்களாக தோற்றமளித்தாலும் இக்கதைகளுக்குள் புழங்குபவள் சாரமான பெண் ஒருத்திதான்
என்பதற்கான இரு பிரதான காரணங்களைச் சொல்லலாம்.
ஒன்று, தன் உடல், மனம் மற்றும் வாழும்
சூழல் ஆகிய புலங்களில் தன் மீதான அழுத்தங்களுக்கு எதிரான மீறலை தொடர்ச்சியாக அவள் நிகழ்த்துகிறாள்.
இரண்டு, ஆண் என்ற உயிரியை தன் எதிர்நிலையில் வைத்து இருபால் அடையாளங்களில் உள்ள முடிவுறாத
முரண்களைப் பேசுகிறாள், கனவுகள் காண்கிறாள், அந்த ஆணோடு மிருகப்புணர்ச்சியும் கற்பனைகளில்
சுயஇன்பமும் செய்துகொள்கிறாள், அந்த ஆணை தன்னுள் முழுமையாக உள்வாங்கி அணுவணுவாக கிரகிக்க
விருப்பம் கொண்டிருந்தாலும் அதைச் செய்யவியலாமல் தாபித்துத் தவிக்கிறாள்.
ஆணுடனான
அவளுடைய உரையாடல் சதுரங்க ஆட்டத்தைப் போன்றதாகவே
இருக்கிறது. ஜெய், அ, வெள்ளி மற்றும் கிரீஷ் போன்றவர்கள் பெண்கள் தங்கள் வாழ்க்கையின்
வெவ்வேறு அடுக்குகளில் எதிர்கொள்ளும் ஆண்களின் மாதிரிகளாகவும் பிரதிகளாகவும் இருக்கிறார்கள்.
இங்கே கவனிக்கப்படவேண்டியது ஆண்களின் மீதான அப்பெண்களின் வெறுப்பின்மை. புரட்சிக்காரனாகவும்
போராளியாகவும் இருக்கின்றபட்சத்தில்கூட ஆண் என்ற நிலையிலிருந்து இறங்க முடியாத அல்லது
விரும்பாதவர்களுடன் லைலா எக்ஸின் பெண் கதாப்பாத்திரம் உரையாடிக் கொண்டே இருக்கிறாள்.
வன்மம்
மற்றும் பதின்மம் X உடல்= இவ்வாழ்வு ஆகியவற்றை அவற்றின் உள்ளுறை தன்மைகளின் மூலம் தொடர்புறுத்தி
ஒரு பெண்ணின் இருவேறு முன்பின் பருவங்களின் கதைகளாக மாற்றி வாசிக்கலாம். இவ்விரு கதைகளில்
சொல்லப்படும் குடும்பங்கள் குடிகாரத் தந்தை, வாயில்லாத் தாய் மற்றும் பாலியல் மீறலை
நிகழ்த்தும் பெண் என்ற ஒரே வார்ப்புருவில்
அமைந்தவை. தன் உடலின் வேட்கைகளை எந்தப்பூச்சும் இல்லாமல் அவ்வண்ணமே நிகழ்த்திக்கொள்ளும்
அப்பெண்கள் தங்கள் அடையாளத்தை அம்மீறலின் மூலமே அடைய விரும்புகிறார்கள்.
நினைவி-பெண்,
கதா-ஆண், மாயநகரம் மற்றும் வேதநூல்கள் போன்ற உருவகங்களைக் கொண்டு ஒற்றையை பன்மையாகவும்
பன்மையை ஒற்றையாகவும் மாற்றி நெய்யப்பட்டிருக்கிறது சூனியக்காரன்களின் கதை. நடைமுறையில்
நிறுவப்பட்டிருக்கும் பொது ஒழுக்க விதிகள், பெண்வெளி அடைபடும் சட்டகங்கள் மற்றும் அவளை
ஒடுக்கும் நுட்பமான தந்திரங்கள் போன்றவை பேசப்படும் இக்கதையில் உருவாக்கத்தில் பெண்ணுக்கு
எந்தப் பங்குமில்லாத அவளுடைய பொதுவெளிப் பிம்பம் சிதைத்துக் குலைக்கப்படுவதின் வழியே
ஒரு எதிர்நிலை முன்வைக்கப்படுகிறது. மேலும் பெண்ணைக் குறித்த ஆணின் மாறாத மனப்பதிவுகளின்
மீது வினைபுரிந்து அவனைச் சலனமூட்டுவதற்கான எத்தனிப்பையும் காணமுடிகிறது.
அரசியல்
மற்றும் தத்துவத் தளத்தில் இருபால் அடையாளங்களுக்கிடையேயான உரையாடல் நிகழும் வலது காதல்
இடது காதலி கதையின் உள்ளோட்டத்தின் காலவரிசை
வலதிலிருந்து இடதை நோக்கி இருப்பதைக் கவனிக்கலாம். கதைக்கான நாடகீயம் வெகுவாக
குறைவுபட்டு எண்ணங்கள் மற்றும் சிந்தனையோட்டங்களால் நிரம்பிய இக்கதையை பின்பருவமாகவும்
கலை என்ற தளத்தில் இருபால் அடையாளங்களின் உரையாடல் மிக உயிரோட்டமாக அமைந்த பிரதியின்
நிர்வாணம் கதையை முன்பருவமாகவும் வைத்து வாசிக்கலாம்.
பொதுவாகவே
லைலா எக்ஸின் பெண்கள் எதிர்ப்புணர்வும் உறுதிப்பாடும் உடையவர்களாக இருந்தாலும் “கனகாவின்
மென்பொருள் மேம்படுத்தப்பட்டது” கதையின் லெட்சுமி (எ) கனகா சமரசங்களுக்கு உட்படுபவளாகவும்
அமைப்பிலிருந்து வெளியேற முடியாதவளாகவும் இருக்கிறாள். இத்தனைக்கும் பொருளாதார சுதந்திரமடைந்தவளான
அவள் மிக நுட்பமான வர்க்க வேறுபாட்டுக்குள் அடையாளத் திரிபடைகிறாள். குடும்ப அமைப்பின்
மூலம் அவள் ஒரு மென்பொருளைப் போல் தொடர்ச்சியாக bug fixing செய்யப்பட்டு குலவிளக்காக
மேம்படுத்தப்படுகிறாள்.
சாதீய
மற்றும் வர்க்க ஒடுக்குதலிலிருந்து மேலேற முயலும் பெண்ணொருத்தியின் போர்க் குணத்தை
மையப்படுத்திய முத்தி கதையின் குடும்பம் வழக்கமான வார்ப்புருவில் அமைந்தது. கதையின்
ஆதார விஷயம் எளிதில் யூகிக்கக்கூடியதாக இருந்தாலும் மனிதர்களின் சமூக முன்னூகங்களை
எதிர்ப்பதற்கு மட்டுமல்லாமல் விலகி நிற்பதற்கேகூட பொருளியல் விடுதலை அடிப்படையாக இருக்கிறது
என்ற கருத்தாக்கத்தை அவதானிக்கலாம். வெகுசனப் பத்திரிக்கைக்கான எளிமையான மொழிநடையோடு
அமைந்த இக்கதை தன்னியல்பாகவே பிறகதைகளின் மொழிநடை குறித்த சிந்தனையைத் தூண்டுகிறது.
கதைகளுக்குள் சிந்தனைத் தாக்கமும் கட்டுரை உள்ளுறையும் விரவிய இடங்கள் பலவற்றில் திருகித்
திருகி அமைக்கப்பட்ட வாக்கியங்களை இன்னும் சற்றே தெளிவாக்கி இருக்கலாம்.
பிரதியின்
நிர்வாணம், பதின்மம் X உடல்= இவ்வாழ்வு, சூனியக்காரன்களின் கதை போன்றவற்றில் கதை, ஓவியம்
போன்ற கலைவடிவங்களின் பரப்பில் வாழ்க்கையையும் அவ்வடிவங்களின் பண்புகள் சம்பவங்களாகவும்
ஊடுபாவிய சொல்முறையை அவதானிக்க முடிகிறது. பெண்ணின் உடல் வேட்கைகளும் பாலுணர்வும் மனத்தடையற்றுப்
பேசப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் வெறும் அதிர்ச்சி மதிப்பீடுகளுக்காகச் சொல்லப்படாமல்
சிந்தனையின் பகுதியாகவே அமைந்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பின்குறிப்பு:
எம்.கே.
மணியின் ”கற்பு” குறித்த கதையில் வல்லுறவில் நல்ல சுகம் பெற்ற பெண் நாளைக்கும் வருவீங்களா
என்று கேட்பதை எழுத்தாளன் இறங்கக்கூடாத சராசரிக்கும் கீழான பார்வை என்பதாய் குறிப்பிட்டிருந்தேன்.
அதே சமயத்தில் லைலா எக்ஸின் ”கனகாவின் மென்பொருள் மேம்படுத்தப்பட்டது கதையில் இப்படி
ஒரு பகுதி.
”…அப்படியே
யாரேனும் ஒருவேளை தன்னை கற்பழிக்க வந்தால் தானே ஒத்துழைப்பு கொடுப்பதாய் சொல்லிவிட்டால்
ஆயிற்று என்பதாகவும், தனக்கும் போதுமான அளவு உடலுறவு கிடைப்பதில்லை தானே என்றும் தன்னைத்தானே
சமாதானப்படுத்திக்கொள்ளும் விதமாய் நினைத்துக்கொண்டாள்.”
கற்பு
கதையில் அது ஒரு சம்பவமாக நிகழ்கிறது. பின்னதில் அதுவொரு எண்ணமாக சொல்லப்படுகிறது.
ஒருவிதத்தில் மணியின் பார்வையில் பிழையில்லை என்பதை லைலாவின் கதை மறு உறுதியாக்கம்
செய்கிறது. இரண்டிலுமே பெண்ணுர்வுகள் ஒரேவிதமாய் தொழிற்படுகின்றன. இப்போது கனகாவின்
எண்ணத்தை மிருக உணர்ச்சியாகச் சொல்வதா அல்லது வாழ்க்கைச்சிக்கல்கள் கூட்டிய மனஅழுத்தங்களின்
வடிகாலாகவுணர்வாகப் பார்ப்பதா? அல்லது என் பார்வை புனிதமையவாதத்தின் அடிப்படையில் அமைந்ததா?
இந்தக் கேள்விகளை எனக்குள் கேட்டுக்கொள்கிற அதே தருணத்தில் உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன்.
(மணல்வீடு இதழில் வெளியான கட்டுரை)